தமிழ்நாடு அரசின் 2026-27 நிதிநிலை அறிக்கையில் ஏழை மக்களின் வீட்டுவசதிக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. குடிசை வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்ட உதவும் மானியத் தொகை ரூ.3.10 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ‘வெற்றி வீடு திட்டம்’ என்ற புதிய மாநில வீட்டுவசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நிதியமைச்சர் என். மரிய வில்சன் இதனை அறிவித்தார். அவரது உரையில், “புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்கு முன்னர் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் மானியம் வழங்கப்பட்டிருந்தது. இனி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்படும்” என்று கூறினார். இத்திட்டம் முன்னர் ‘கலைஞர் கனவு இல்லம்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. 2010ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட இத்திட்டம், 2030க்குள் தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில் அமைந்தது. மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் குடிசைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆட்சியில் 2 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் மானியத்துடன் ரூ.40,000 மதிப்புள்ள சிமென்ட், இரும்புக் கம்பிகள் போன்ற கட்டுமானப் பொருட்களும் வழங்கப்பட்டன. கூடுதலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்ட நிதியும், தேவைப்பட்டால் ரூ.1.5 லட்சம் வரை வங்கிக் கடனும் கிடைத்தன.
தகுதிகளில் மாற்றம் இல்லை. சொந்தப் பட்டா நிலத்தில் குடிசை அல்லது தகரக் கொட்டகையில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வீடு குறைந்தபட்சம் 300 சதுர அடி பரப்பளவில் இருக்க வேண்டும். அதில் சமையலறை, ஹால், கழிவறை இடம்பெற வேண்டும். மின்சாரம், குடிநீர் இணைப்புகளும் இருக்க வேண்டும். விலைவாசி உயர்வால் பழைய மானியத் தொகையால் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டதால், பல்வேறு தரப்பினரும் தொகையை உயர்த்துமாறு வலியுறுத்தியிருந்தனர்.
தற்போதைய உயர்வு இதற்கு நேரடிப் பதிலாக அமைந்துள்ளது. இருப்பினும், திட்டப் பெயரை மாற்றியதற்கு அரசியல் ரீதியான விமர்சனங்களும் எழுந்துள்ளன. எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இந்த நடவடிக்கை, குடிசை இல்லாத தமிழ்நாட்டை நோக்கிய முக்கிய அடியாகக் கருதப்படுகிறது.
