தமிழ்நாட்டில் கட்டுமானத் துறையை பாதிக்கும் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ள நிலையில், அரசு உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு தற்காலிக தடை விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கட்டுமானப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து பொதுமக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு யூனிட் ஜல்லியின் விலை ரூ.4,000லிருந்து ரூ.5,000 ஆகவும், எம்.சாண்ட் ரூ.5,000லிருந்து ரூ.6,000 ஆகவும், பி.சாண்ட் ரூ.6,000லிருந்து ரூ.7,000 ஆகவும் திடீரென அதிகரித்துள்ளது. இந்த உயர்வு வீடு கட்டும் நடுத்தர வர்க்க மக்களை மட்டுமின்றி, கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழிலாளர்களையும் பெரிதும் பாதித்துள்ளது.

வங்கிக் கடன் மற்றும் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்து வீடு கட்டத் தொடங்கிய பலர், தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக பணிகளை நிறுத்தி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கட்டுமானத் தொழில் முடக்கம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்த நிலையை சரிசெய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளது. சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு கருங்கல், பாறை, எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்தும் மற்றும் தற்காலிகமாக தடை விதிக்கும் முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்திற்குள் போதுமான அளவு கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு நோக்கம் கொண்டுள்ளது. மேலும், சட்டவிரோத கனிம சுரங்கம், அவற்றின் போக்குவரத்து மற்றும் சேமிப்பு தொடர்பான விதிகளில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, சரியான வழியில் கனிமங்களை பயன்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானத் துறை வல்லுநர்கள், “உள்ளூர் தேவையை முதலில் பூர்த்தி செய்யாமல் ஏற்றுமதி செய்வது தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை உடனடி நிவாரணம் அளிக்கும்” என வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், விலை உயர்வுக்கு முழுமையான தீர்வு காண சுரங்கங்களை அதிகரிப்பது, சட்டப்பூர்வமான சுரங்க நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட நீண்டகால திட்டங்கள் தேவை என்கின்றனர்.

தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சற்று தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த அரசுக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version