டாஸ்மாக் மதுபானங்களின் அதிகபட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ.10 செஸ் வரி வசூலிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்தது.
அதில், தற்போது காலி பாட்டில்களுக்கு தனியாக வசூலிக்கப்படும் ரூ.10-ஐ, இனி மதுபானத்தின் அதிகபட்ச விற்பனை விலையிலேயே சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறுதல் மற்றும் மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட பொறுப்புகளை சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 செஸ் வரி விதிப்பது குறித்து வணிகவரித்துறை அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாகவும், மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
