இன்ஸ்டாகிராம் பயனர்களின் பொதுப் புகைப்படங்களைப் பயன்படுத்தி புதிய படங்களை உருவாக்கும் ஏஐ அம்சத்தை, தனியுரிமை குறித்த கடும் விமர்சனங்களுக்குப் பிறகு மெட்டா நிறுவனம் அதிரடியாக நிறுத்தியுள்ளது.
மெட்டா நிறுவனம், தனது ‘மெட்டா ஏஐ’ (Meta AI) சாட்போட்டில், ‘மியூஸ் இமேஜ்’ (Muse Image) என்ற ஏஐ தொழில்நுட்பத்தை கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்த வசதியைப் பயன்படுத்தி, பயனர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள பொதுப் புகைப்படங்களை உள்ளீடாகக் கொடுத்து, புதிய படங்களை உருவாக்கவும், அவற்றை எடிட் செய்யவும் முடியும்.
இந்த அம்சம் அறிமுகமான சில நாட்களிலேயே, பயனர்களின் விருப்பம் கேட்கப்படாமலேயே இது ‘ஆட்டோமேட்டிக் ஆப்ட்-இன்’ (Automatic Opt-in) முறையில் செயல்படுத்தப்பட்டதாகப் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. இது தங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை பயனர்களிடையே ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் ஹாலிவுட் நடிகர் ஹன்னா ஐன்பிண்டர் மற்றும் ஊடகப் பணியாளர்களின் அமைப்பான SAG-AFTRA உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பயனர்களின் அனுமதியின்றி அவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது தனியுரிமை மீறல் என்றும், இந்த அம்சத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பயனர்களின் கருத்துகளையும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள மெட்டா நிறுவனம், “எங்கள் நோக்கம் ஆக்கப்பூர்வமான கருவியை வழங்குவதாகவே இருந்தது. ஆனால், இந்த அம்சம் பயனர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை உணர்ந்துள்ளோம். எனவே, இந்த அம்சம் உடனடியாக நிறுத்தப்படுகிறது” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இன்ஸ்டாகிராம் பயனர்களின் படங்களை இத்தகைய பயன்பாடுகளுக்கு உட்படுத்துவதற்குத் தெளிவான மற்றும் வெளிப்படையான ஒப்புதல் (opt-in) பெறப்படாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய பயன்பாட்டில் உள்ள வெளிப்படையான ஆபத்துகள் மற்றும் தீங்குகள் குறித்த பொதுமக்களின் உணர்வுகளை இது முற்றிலும் தவறாகக் கணித்ததைக் காட்டுகிறது,” என்று SAG-AFTRA கூறியது. இந்த அம்சத்தை நீக்குவதற்கான Meta-வின் முடிவை SAG-AFTRA வரவேற்றது.
“அனுமதியின்றி உருவாக்கப்படும் டிஜிட்டல் நகல்களால் ஏற்படும் ஆபத்துகள் அனைவருக்கும் தெரிந்ததே; அத்தகைய செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு அம்சம் புத்திசாலித்தனமானது அல்ல. இதை நிறுத்தியதை நாங்கள் பாராட்டுகிறோம். இது ஒரு பொறுப்பான நடவடிக்கையாகும்,” என்று தொழிற்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பொதுவெளியில் பகிரப்பட்ட உள்ளடக்கத்தை AI அம்சங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்துப் பயனர்களுக்குத் தெளிவான கட்டுப்பாட்டை வழங்க வேண்டும் என்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான அதிகரித்து வரும் அழுத்தத்தையே இந்த முடிவு பிரதிபலிக்கிறது.
