தமிழகம் முழுவதும் தனியார் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஆரோக்யா பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பின்னர் பிற தனியார் நிறுவனங்களும் விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பால் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட டீ மற்றும் காபி விலையும் விரைவில் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பால் கொள்முதல் விலை உயர்வு, விநியோகச் செலவு அதிகரிப்பு மற்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன. புதிய விலை அமலுக்கு வந்துள்ள நிலையில், சமன்படுத்தப்பட்ட பால் 500 மில்லி ரூ.29-ல் இருந்து ரூ.31-ஆகவும், நிலப்படுத்தப்பட்ட பால் 500 மில்லி ரூ.35-ல் இருந்து ரூ.37-ஆகவும், கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பால் 500 மில்லி ரூ.39-ல் இருந்து ரூ.41-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், 1 லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.66-ல் இருந்து ரூ.69-ஆகவும், கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.73-ல் இருந்து ரூ.76-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று முதல் இந்தப் புதிய விலை அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பால் பயன்பாடு அதிகம் உள்ள குடும்பங்கள், தினசரி தேநீர், காபி பழக்கம் உள்ளவர்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இதனால் கடுமையான பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“பால் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும். குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்” என சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையைச் சரிசெய்ய, அரசு நிறுவனமான ஆவின் பாலின் விற்பனையை தமிழகம் முழுவதும், குறிப்பாக கிராமப்பகுதிகளில் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது பல கிராமங்களில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விலை உயர்வு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version