கரூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவின் போது, மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் மணவாசி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. இவர் பல்வேறு கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நடனக் கலைஞராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கரூர் அருகே உள்ள தொழில்பேட்டை பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, இரவு நேர கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தனது நடனக் குழுவினருடன் கலந்துகொண்ட ஜீவா, மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடிக்கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக ஜீவா திடீரென மேடையிலேயே மயங்கிச் சரிந்து விழுந்தார். இதைக் கண்டு அங்கிருந்தவர்களும், அவருடன் ஆடிக்கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஜீவா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர். மேடையில் உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்த கலைஞரின் உயிர், கண் இமைக்கும் நேரத்தில் பிரிந்த சம்பவம், சக நடனக் கலைஞர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த நடன நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால், இந்தத் துயரச் செய்தி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version