சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, 100 நாள் வேலைத் திட்டத்தில் (MGNREGS) பணியாற்றும் பெண்களை, தாம் கூறும் நபர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி, கத்தி காட்டி மிரட்டியதாக தமிழக வெற்றி கழக (தவெக) நிர்வாகி ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி ஏரியில், இன்று 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பெண்கள் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சக்தி என்ற தமிழக வெற்றி கழக நிர்வாகி அங்கு வந்து, தாம் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கப்படாவிட்டால் யாரும் வேலை செய்யக் கூடாது என்றும் கூறி, கத்தியை காட்டி பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோவில், சம்பவ இடத்தில் வாக்குவாதம் நடைபெறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும், 100 நாள் வேலைத் திட்டத்தில் அரசியல் தலையீட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அல்லது மாவட்ட நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வெளியிடவில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version