புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் பகுதியில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையும் நிகழ்ச்சி உற்சாகமான சூழலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் சிறப்பு முன்னிலை வகித்து, புதிய உறுப்பினர்களை கட்சியில் வரவேற்றார்.

ஏம்பல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐந்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அமைச்சர் முகமது பர்வேஸ் கட்சியின் சால்வையை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலப் பணிகளில் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இணைந்து வரும் நிலையில், தற்போது பொதுமக்கள் அளவிலும் ஆதரவு அதிகரித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாகவே இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பிறகு கட்சியில் இணைந்த அனைவருக்கும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன், முட்டை மற்றும் சைவ உணவை விரும்புவோருக்காக வெஜிடபுள் பிரியாணி உள்ளிட்ட உணவுகள் சூடாக பரிமாறப்பட்டன. இந்த கறி விருந்தில் புதிய உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும், உள்ளூர் பொறுப்பாளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்தும் அப்பகுதியில் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version