வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தீவான பூ குவோக் (Phu Quoc) அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒருவர் தமிழகத்தின் பழனியைச் சேர்ந்தவர் என்னும் தகவலும் வெளியாகி உள்ளது.
உள்ளூர் ஊடகங்கள் மற்றும் சர்வதேச செய்தி நிறுவனங்களின் தகவலின்படி, 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் பயணித்த அதிவேக படகு, ஹான் மே ரூட் (Hon May Rut) தீவிலிருந்து ஆன் தோய் (An Thoi) துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஹான் மே ரூட் ந்கோய் (Hon May Rut Ngoai) பகுதியில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் கடலில் படகு திடீரென கவிழ்ந்ததால், அதில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர்.
விபத்து தொடர்பாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து வியட்நாம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வியட்நாமின் பூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஹோ சி மின் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் ஹனோயில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் (Control Rooms) அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
வியட்நாமின் மிகப்பெரிய தீவான பூ குவோக், அந்நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
