செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா (எ) வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில், நவீன் (24) என்ற ஒப்பந்ததாரர் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு முடித்துள்ளார். சாலை பணிகள் நிறைவடைந்த நிலையிலும், அதற்கான பில் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமியிடம் ஒப்பந்ததாரர் முறையிட்டபோது, பில் தொகையை விடுவிக்க அவர் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஒப்பந்ததாரர் நவீன் ஜி-பே (G-Pay) மூலமாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் இரண்டு முறைகளில் மொத்தம் ஒரு லட்சம் ரூபாயை ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுப்பியுள்ளார். மீதமுள்ள ரூ.30,000 பணத்தை நேரில் கொடுக்கும்போது, அதனைத் தனது கைபேசியில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
“ஏற்கனவே ஆன்லைனில் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பிவிட்டேன், இப்போது மீதி 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டேன், தயவுசெய்து பில் பாஸ் செய்துவிடுங்கள்” என்று ஒப்பந்ததாரர் கூறுவதும், அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பணத்தைப் பெற்றுக் கொள்வதும் போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2023 செப்டம்பரில், மாம்பாக்கம் ஊராட்சியில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக வார்டு உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில், வீராசாமியின் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பறிக்கப்பட்டு, அவரது ‘செக் பவர்’ (காசோலை அதிகாரம்) ரத்து செய்யப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் மீண்டும் அவர் ஊராட்சி மன்ற தலைவராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளார்.
இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை வீராசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். கடந்த மாதம் தன்னிடம் நவீன் ரூ.1.30 லட்சம் கடனாகப் பெற்றிருந்ததாகவும், அந்தப் பணத்தைத்தான் தற்போது ஆன்லைன் மூலமாக ஒரு லட்சமும், நேரில் 30 ஆயிரமும் திருப்பித் தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, கடன் தொகையைத் திருப்பித் தரும்போது திட்டமிட்டு தவறாக வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பியுள்ளதாக வீராசாமி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் லஞ்சமில்லாத ஆட்சி நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தவெக பிரமுகர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையும், தமிழ்நாடு காவல்துறையும் உரிய விசாரணை நடத்தி, இது லஞ்சப் பணமா அல்லது கைமாற்றாக வாங்கிய கடனா என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
