ருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான புவியரசு இன்று கோவையில் காலமானார். அவருக்கு வயது 96.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனியில் வசித்து வந்த அவர், முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

1931-ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே லிங்கவநாயக்கன்புதூரில் பிறந்த அவரது இயற்பெயர் சு. ஜெகநாதன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றிய அவர், 1952 முதல் இலக்கியப் பணியில் ஈடுபட்டார்.

வானம்பாடி இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான புவியரசு, 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, தஸ்தயெவ்ஸ்கி, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

வங்கக் கவிஞர் நஜ்ருல் இஸ்லாமின் “தி ரெவலூஷனரி” நூலின் தமிழாக்கமான ‘புரட்சிக்காரன்’ நூலுக்காக 2007-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார். தொடர்ந்து அவரது ‘கையொப்பம்’ கவிதைத் தொகுப்புக்காக 2009-ஆம் ஆண்டு மீண்டும் சாகித்ய அகாடமி விருது பெற்றார். ‘முக்கூடல்’ நூலுக்காக 2004-ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த புதுக்கவிதை நூலுக்கான விருதையும் பெற்றிருந்தார்.

தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவரான புவியரசுவின் மறைவு, இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்” : மு.க.ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வானம்பாடி கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முக்கியமானவரும், முதுபெரும் கவிஞருமான புவியரசு அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.  உலகின் பெரும் கவிகள், எழுத்தாளர்களின் இறவாக் காவியங்களைத் தமிழில் ஆக்கியளித்துப் பங்காற்றியவர்.

தம் வாழ்வே தமிழ் வாழ்வாக வாழ்ந்து மறைந்துள்ளார் கவிஞர் புவியரசு. அன்னாரை இழந்து வாடும் தமிழ் கூறும் நல்லுலகத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version