மத்திய கிழக்கில் இந்திய மாலுமிகளைக் கொண்ட வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் 3 இந்திய மாலுமிகள் பலியான விவகாரம், தற்போது சர்வதேச அளவில் பெரும் போராக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைத் தொடர்பு கொண்டு இந்தியாவின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

https://x.com/DrSJaishankar/status/2065518118802461072?

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், “வளைகுடா பகுதியில் 3 இந்திய மாலுமிகள் பலியாவதற்குக் காரணமான அமெரிக்க கடற்படையின் தாக்குதல்களுக்கு இந்தியாவின் வலுவான எதிர்ப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் மீண்டும் வலியுறுத்தினேன். வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் இத்தகைய கொடிய தாக்குதல்கள் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

வளைகுடாப் பகுதியில் இந்த வாரம் முழுவதும் இந்திய மாலுமிகள் இருந்த வணிகக் கப்பல்கள் அடுத்தடுத்து இலக்கு வைக்கப்பட்டன.  கடந்த 8 ம் தேதி பலாவ் நாட்டு கொடியுடன் சென்ற இக்கப்பலில் 24 இந்திய மாலுமிகள் இருந்தனர். ஓமன் கடலோரப் பகுதியில் தாக்கப்பட்ட இவர்களை ஓமன் ராணுவம் மீட்டது.

இதேபோல் கடந்த கடந்த 10ம் தேதி மற்றுமொரு பலாவ் கொடி தாங்கிய கப்பல் தாக்கப்பட்டதில், 3 இந்திய மாலுமிகள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். தொடர்ந்து கடந்த 11ம் தேதி கினியா-பிசாவ் கொடியுடன் சென்ற இக்கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதிலிருந்த 20 இந்திய மாலுமிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக உயர் அதிகாரி ஜேசன் மீக்ஸை நேற்றைய தினம் மத்திய அரசு நேரில் அழைத்து தனது கடும் கண்டனத்தை முறைப்படி பதிவு செய்தது.

இந்திய மாலுமிகள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று கூறி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதிபர் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், “ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ட்ரோன்  தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஈரான் தனது செயல்களை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

https://x.com/Iran_in_India/status/2065509494159991234?

அதிபர் டிரம்பின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியக் கப்பல் மீதான தாக்குதலுக்கு ஈரானைக் குற்றம் சாட்டுவது முற்றிலும் அடிப்படையற்றது. ஒரே வாரத்தில் 3 இந்தியக் கப்பல்களைத் தாக்கி, 3 அப்பாவி இந்திய மாலுமிகளைக் கொன்ற கொடூரமான உண்மையை மூடிமறைக்கவும், பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவுமே அமெரிக்கா இந்த நாடகத்தை ஆடுகிறது” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version