டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி தொடர்ந்து பதற்றமான களமாக மாறியுள்ளது. நீட் (NEET) வினாத்தாள் கசிவு சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தலைமையில் மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பெரும் மோதல் ஏற்பட்டது. தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, கல் வீச்சு ஆகியவை அரங்கேறின. சில போராட்டக்காரர்கள் போலீசாரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் ஏராளமான போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தனர். டெல்லி முழுவதும் பதற்றம் நிலவிய நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் இன்னும் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டங்கள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கடந்த ஜூலை 17ஆம் தேதியே டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ஜூலை 20ஆம் தேதி மத்திய டெல்லியில், குறிப்பாக ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்றச் சுற்றுப்பகுதிகளில் பெருந்திரளான மக்கள் கூடக்கூடும் என்றும், ஜூலை 21ஆம் தேதி கிசான் காட்டில் விவசாய அமைப்புகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த முன்கூட்டிய எச்சரிக்கை நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “போராட்டத் திட்டங்கள் அமெரிக்க தூதரகத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்பே எப்படித் தெரிந்தது? இந்தப் போராட்டத்தின் பின்னணியில் வெளிசக்திகள், குறிப்பாக அமெரிக்கா ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?” எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சமூக ஊடகங்களில் இது தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
NEET தேர்வு கசிவு விவகாரம் ஏற்கெனவே நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் நடைபெறும் இந்தப் போராட்டங்கள் மத்திய அரசுக்கு அழுத்தத்தை அதிகரித்துள்ளன. போராட்டம் அமைதியான முறையில் இருக்க வேண்டும் என உள்ளூர் நிர்வாகம் வலியுறுத்தியுள்ள போதிலும், பதற்றம் நீடிக்கிறது.
