அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த கடுமையான போர் மற்றும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், வரலாற்றுச் சிறப்புமிக்க 14 அம்ச அமைதி ஒப்பந்தத் திட்டம் எட்டப்பட்டுள்ளது. இந்த முக்கிய ஒப்பந்தம் வரும் ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், கத்தார் போன்ற நாடுகளின் இடைத்தரகர் முயற்சிகளுக்குப் பிறகு, ஈரானின் ‘மெஹர் செய்தி நிறுவனம்’  இந்த 14 அம்ச வரைவு ஒப்பந்தத்தின் முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் லெபனான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் உடனடியாகவும் நிரந்தரமாகவும் போரை நிறுத்துதல்.

ஈரானின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்றும், ஈரானின் இறையாண்மையை மதிக்கும் என்றும் அமெரிக்கா உறுதியளிப்பது.

ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை 30 நாட்களுக்குள் முழுமையாக அகற்றுதல்.

ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அமெரிக்க ராணுவப் படைகளைத் திரும்பப் பெறுதல்.

உலக அளவில் மிக முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) கடல் வழியை, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி 30 நாட்களுக்குள் மீண்டும் திறப்பது.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு இருதரப்பும் பரஸ்பர உத்தரவாதம் அளிப்பது.

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை படிப்படியாக நீக்குதல்.

முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் 24 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களை, 60 நாட்கள் பேச்சுவார்த்தை காலத்திற்குள் விடுவிப்பது.

இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம் மற்றும் வங்கி நடைமுறைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல்.

ஈரானின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு பிரத்யேக மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியை உருவாக்குவது.

எதிர்கால ராணுவ நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குதல்.

இரு நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை ராணுவ ரீதியாக அணுகாமல், ராஜதந்திர ரீதியில் தீர்ப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவது.

ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளின் எதிர்காலம் குறித்து விவாதிக்க தனியாக 60 நாட்கள் கால அவகாசத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது.

இந்த ஒப்பந்தத்தின் விதிகள் சரியாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் சரிபார்க்கவும் ஒரு கூட்டுப் பொறிமுறையை அமைப்பது.

இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ‘ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “ஈரான் உடனான ஒப்பந்தம் முழுமையடைந்துள்ளது. ஜூன் 19 முதல் ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித கட்டணமும் இன்றி திறக்க உத்தரவிட்டுள்ளேன். உலக நாடுகளின் கப்பல்களே, உங்கள் இன்ஜின்களைத் தொடங்குங்கள். கச்சா எண்ணெய் தடையின்றி பாயட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

மறுபுறம், ஈரானும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது. ஆனால், ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாடி கூறுகையில், வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகும் வரை ஈரான் இதனைச் செயல்படுத்தத் தொடங்காது என்றும், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்த பின்னரே 60 நாட்கள் அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈரான் ஈடுபடும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்கா-ஈரான் இடையே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்ட போதிலும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இந்த ஒப்பந்தம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஒப்பந்தம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால் சர்வதேச நாடுகள் நிம்மதி அடைந்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version