ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து ஆறாவது நாளாக அமெரிக்கா, ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் ராணுவ திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன” என கூறப்பட்டுள்ளது. மேலும், ஈரானின் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஓமான் வளைகுடாவில் ஒரு எண்ணெய் கப்பலில் அமெரிக்க கடற்படையினர் சோதனை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்கா, ராணுவ இலக்குகளை மட்டுமின்றி, பாலங்கள், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு உள்கட்டமைப்புகளையும் தாக்கியதாக ஈரான் அரசு ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் பந்தர் அப்பாஸ் நகருக்கு மேற்கே உள்ள ஒரு பாலம் தாக்கப்பட்டதை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும், ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள கேஷ்ம் தீவு, பந்தர் அப்பாஸ் மற்றும் அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷேர் பகுதிகளிலும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், CENTCOM வெளியிட்ட அறிக்கையில் பாலங்கள் குறித்து எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக, கடலோர கண்காணிப்பு மையங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ராணுவ தளவாட வசதிகள் மற்றும் கடல்சார் ராணுவ திறன்கள் உள்ளிட்ட பல டஜன் ராணுவ இலக்குகள் தாக்கப்பட்டதாக கூறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version