கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் (V.D. Satheesan) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றுவதில் நிலவி வந்த நீண்ட நேர இழுபறிக்கு, காங்கிரஸ் தேசியத் தலைமையின் இந்த அறிவிப்பு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் 102-இல் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக, புதிய முதலமைச்சரை தேர்வுசெய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் மூத்த தலைவர்களிடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியாக, கட்சியின் அனுபவத்தை கருத்தில் கொண்டு, டெல்லி மேலிடம் வி.டி.சதீசனை முதல்வராக அறிவித்தது. ஏற்கனவே கேரள எதிர்க்கட்சித் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்ட அவரது அனுபவம், ஆட்சி நிர்வாகத்திற்குப் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் அறிவிக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். விரைவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க வி.டி.சதீசன் உரிமை கோர உள்ளார். இதன் மூலம் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சி அமைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வக்கீல் டூ முதல்வர்: கேரள ஐகோர்ட் வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய வி.டி.சதீசன்(61) இளம் வயதிலேயே காங்கிரஸில் சேந்தவர். இதனை தொடர்ந்து 2001ல் பர்வூர் தொகுதியில் வென்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அத்தொகுதியில் தொடர்ந்து 6 முறை அவரே வெற்றிபெற்றது தனி சிறப்பு. முந்தைய எல்.டி.எஃப் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயலாற்றிய இவர், இந்த முறை முதலமைச்சர் அரியணையை அலங்கரிக்கவுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version