மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாரூய்பூரில், 11 வயது சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மதியம் தோழியின் பிறந்தநாளுக்காக பரிசு வாங்கச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அந்தச் சிறுமியின் உடல் அங்குள்ள குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டது.

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டிய அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள், பாரூய்பூர்-ஜோயநகர் சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில், ஆத்திரமடைந்த கும்பல் டயர்களை எரித்தும், காவல்துறையின் வாகனங்களைச் சேதப்படுத்தியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் சிலரும் காயமடைந்தனர்.

சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்பட்ட 26 வயது இளைஞர் ஒருவரை, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பிடித்து கடுமையாகத் தாக்கி படுகொலை செய்தனர். இந்த கொடூர சம்பவத்தில் மொத்தம் நான்கு பேர் ஈடுபட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் காவல்துறையினரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறைச் சூழலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறிய நிலையில், போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இது குறித்துப் பேசிய பிரசிடென்சி ரேஞ்ச் ஐஜி கன்கர்பிரசாத் பருய், சம்பவம் குறித்து தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் உறுதியளித்தார்.

உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பாரூய்பூர் துணைப் பிரிவு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் மற்றும் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாரா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உறுதி செய்யப்படும். இச்சம்பவம் தொடர்பாகப் புலனாய்வு செய்ய சிறப்பு புலனாய்வுக் குழு  அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட முதல்வர் சுவேந்து அதிகாரி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். தற்போது பாரூய்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version