தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத பல்வேறு திருப்பங்களையும், வியூக மாற்றங்களையும் சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் , காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தச் சூழலில், நாளை நடைபெறவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கம், தமிழக அரசியலை அடுத்தகட்டப் பரபரப்புக்கு இட்டுச் சென்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த அமைச்சரான ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியும் இடம்பெற வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்புகிறார்” எனத் தெரிவித்து, விசிக-வுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
தவெக-வின் வியூகமும் இடதுசாரிகளின் எச்சரிக்கையும்
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, “ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு” என்ற முழக்கத்தை முன்வைத்து வந்தது. இது குறிப்பாக விசிக போன்ற தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலைப் பேசும் கட்சிகளைக் கவர்வதற்காகவே வீசப்பட்ட வலையாகப் பார்க்கப்பட்டது. தேர்தல் சமயத்தில் திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறும் என்று தவெக எதிர்பார்த்தது. ஆனால், திருமாவளவன் திமுக கூட்டணியிலேயே நீடித்து 8 இடங்களைப் பெற்று, 2 இடங்களில் வெற்றியும் பெற்றார்.
தற்போது தவெக ஆட்சி அமைத்திருந்தாலும், அவர்களின் பெரும்பான்மை என்பது நூலிழையில் நீடிக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என்ற ஆபத்து உள்ளதால், முதலமைச்சர் விஜய் முன்னெச்சரிக்கையாக அதிமுகவின் பிளவுபட்ட அணியைச் சேர்ந்த எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பு ஆதரவைப் பெற்ற்றுள்ளார்.
ஆனால், இந்த நகர்வுக்குத் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், “அதிமுகவின் வேலுமணி தரப்பை அமைச்சரவையில் சேர்த்தால், தவெக அரசுக்கு அளிக்கும் ஆதரவை நாங்கள் மறுபரிசீலனை செய்வோம்” என்று நேற்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இடதுசாரிகளின் இந்த முட்டுக்கட்டையால்தான், வேலுமணி தரப்பைத் தவிர்த்துவிட்டு, சமூக நீதிப் பின்னணி கொண்ட விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளை அமைச்சரவைக்குள் கொண்டுவர விஜய் தரப்பு இப்போது தீவிரமாக முயல்கிறது.
திருமாவளவனின் நிலைப்பாடும்… திடீர் தடுமாற்றமும்
தவெக ஆட்சி அமைத்தபோது, “வெளியில் இருந்து மட்டுமே தவெக அரசுக்கு ஆதரவு” என்று மிகத் தெளிவாகக் கூறிவந்த விசிக தலைவர் திருமாவளவன், தற்போதைய அமைச்சரவை அழைப்பிற்குப் பின் தனது நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்தைக் காட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் விஜய் என்னை நேரில் சந்தித்தபோது அமைச்சரவையில் சேர அழைப்பு விடுத்தார். தவெக தற்போது வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளதால், அமைச்சரவையில் சேருவது குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று அறிவித்துள்ளார். திருமாவளவனின் இந்தத் திடீர் ‘பரிசீலனை’ என்கிற பேச்சு, அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் பின்னணியில் கட்சியின் உள்ளே இருக்கும் இருவேறு அழுத்தங்களே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கொள்கையா… அதிகாரமா?
தற்போது விசிக இரண்டு மிகப்பெரிய அரசியல் தர்மசங்கடங்களுக்கு இடையே சிக்கித் தவிக்கிறது. ”விசிக தொடங்கி பல தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் வெறும் ‘ஆதரவு கொடுக்கும்’ கட்சியாகவே இருப்பது? நாமும் ஏன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து, நம் மக்களுக்குத் தேவையானதை நேரடியாகச் செய்யக் கூடாது”? என்கிற கேள்வி கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. “ஆட்சியிலும் பங்கு” என்ற தவெக-வின் வாக்குறுதியை அனுபவிக்க இதுவே சரியான தருணம் என்று கட்சியின் ஒரு தரப்பு திருமாவளவனுக்குக் கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஒருவேளை விசிக தவெக அமைச்சரவையில் இணைந்தால், அது திருமாவளவனின் அரசியல் எதிர்காலத்திற்குப் பெரும் சோதனையாக மாறும். முதலாவதாக, தவெக அரசு செய்யும் தவறுகளையும், நிர்வாகக் குறைபாடுகளையும் கொள்கை ரீதியாக எதிர்க்க முடியாமல் விசிக ‘முட்டு கொடுக்கும்’ நிலைக்குத் தள்ளப்படும். இரண்டாவதாக, “நாங்கள் இன்னும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்” என்று இதுவரை கூறிவந்த திருமாவளவனின் வார்த்தைகள் கேலிக்குரியதாகிவிடும். இது திமுக தலைமையின் கடும் அதிருப்திக்கு வழிவகுக்கும் என்பதால், வரும் காலங்களில் திமுக – விசிக உறவு முற்றிலும் முறியும் சூழல் ஏற்படும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ‘கொள்கைக்காக வாழ்பவர்’ என்ற பிம்பத்தைக் கொண்ட திருமாவளவன், வெறும் ‘அமைச்சர் பதவிக்காகத் தடம் மாறிவிட்டார்’ என்ற கடுமையான விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும்.தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், இன்று இரவு விசிக மேற்கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
திருமாவளவன் தனது நீண்டகால திராவிட, சமூக நீதி மற்றும் தலித் முற்போக்குக் கொள்கைகளைக் காக்க ‘வெளியில் இருந்து ஆதரவு’ என்ற பழைய நிலைப்பாட்டிற்கே திரும்புவாரா அல்லது தன் கட்சி நிர்வாகிகளின் விருப்பத்திற்கு இணங்கி, ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ பெற்று தமிழக வரலாற்றில் விசிக-வின் முதல் அமைச்சரை உருவாக்குவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும். எது எப்படியோ, விசிக எடுக்கும் இந்த முடிவு தமிழக அரசியலின் தற்போதைய அதிகாரச் சமநிலையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!
– பா. முகிலன்
