வியட்நாமில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தெற்கு வியட்நாமில் உள்ள பு குவோக் தீவுப் பகுதிக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு விபத்தில் சிக்கியதில், தமிழர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கும், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கும், இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையும், காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
