அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் அப்போது ஹாட் டாப்பிக்.
சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் நொடிக்கு நொடி பரபரப்பு நிலவி வருகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதன் அடிப்படையில் தற்போது கூட்டணிகள் மாறி மாறி அமைந்து வருகிறது. தற்போதுள்ள ஆட்சியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்போடு திமுகவும், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் அதிமுகவும் முழு வீச்சில் களப்பணி ஆற்றி வருகின்றன.
இந்நிலையில் அரசியலில் புதிதாக அடியெடுத்து வைத்து முதல் தேர்தலை சந்திக்கவுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் மும்முரமாக போட்டி போட்டு வருவதால் தற்போதே அனல் பறக்கிறது அரசியல் களத்தில். இப்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்துள்ள திமுக எப்போதும் இல்லாத அளவுக்கு 26 கட்சிகளுடன் ‘மெகா’ கூட்டணியை அமைத்துள்ளது. மறுபுறம் இதைவிட குறைவு என்றாலும் கூட, அதிமுக – பாஜக அணியில் சுமார் 14 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆக, நிலைமை இப்படி இருக்க கூட்டணியை மேலும் பலப்படுத்த விஜய் தலைமையிலான தவெகவையும் இழுப்பதற்கான முயற்சியை பாஜக கடந்த சில மாதங்களுக்கு முன்பே மேற்கொண்டது. ஆனால் அப்போதைய முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை.
‘தவெகவுக்கு பெருமளவு இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆதரவு இருப்பதால் விஜய் தங்கள் அணிக்கு வந்தால் அந்த வாக்குகள் முழுவதும் எளிதாக தங்களது கூட்டணிக்கு கிடைக்கும்; அதன்மூலம் வெற்றியையும் பதிவு செய்ய முடியும்’ என்று பாஜக நம்புவதால் தான், தவெகவை தங்கள் பக்கம் எப்படியாவது இழுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. சரியாக அதற்கு ஏற்ற வகையில், ஏற்கனவே கரூர் சம்பவம், ஜனநாயகன் விவகாரம், தற்போது குடும்ப விவகாரம் என்று பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் விஜய்யை இப்பிரச்சனைகளை வைத்தே தங்கள் பக்கம் திருப்புவதற்கான முயற்சியை மீண்டும் தொடங்கியுள்ளது பாஜக.இதற்காக விஜய் தரப்பிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில், விஜய் தரப்பிடமிருந்தும் இதற்கு எந்த மறுப்பும் தரப்படவில்லையாம்.
‘கொள்கை எதிரி’ என அறிவித்திருந்தாலும் விஜய்யின் மனம் தற்போதைய நெருக்கடியான சூழலில், அதிமுக கூட்டணியில் இணைவதற்கு சம்மதிக்க தயாராகி விட்டதாக சொல்லப்படுகிறது. அதன் வெளிப்பாடாகவே சமீபத்தில் நடந்த கடைசி இரண்டு மக்கள் சந்திப்பு கூட்டங்களில் விஜய் அதிமுகவையும், பாஜகவையும் துளியும் விமர்சனம் செய்யவில்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதுதான் அதிமுக – பாஜக அணிக்கு தவெக செல்வதற்கான சிக்னலாக பார்க்கப்படுகிறது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த தவெக மகளிர் தினத்திற்கான மகளிரணி நிகழ்ச்சிக்கு பிறகு மாநில நிர்வாகிகளிடம் விஜய் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறாராம். அதில் சிலர், “பாஜனதா கூட்டணிக்கு செல்லலாம்” என்றும், சிலர் “வேண்டாம்! அந்த முடிவு நம்முடைய கட்சியை அழித்து விடும்” என்றும் கூறியிருக்கிறார்கள்.
மறுபுறம் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு 10-ந் தேதியான நாளை விஜய் ஆஜராக சம்மன் வர, “தற்போது பல்வேறு நிகழ்வுகள் இருப்பதால் அந்த தேதியில் விஜய் பங்கேற்க இயலாது என்றும் அடுத்த 10 நாட்களுக்கு பிறகு சிபிஐ குறிப்பிடும் தேதியில் பங்கேற்க இருப்பதாகவும்” விஜய் தரப்பில் சிபிஐக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அடுக்கடுக்கான பரபரப்பான நிலையில் தான், “அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக இணைவதற்கான பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கியுள்ளதாக” தகவல் வெளியாகியுள்ளது. அதையடுத்து ‘சுமார் ஓரிரு நாட்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச விஜய் டெல்லி செல்லவிருப்பதாகவும்’ தகவல் வெளியாகி வருகிறது. தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் இந்த ஒட்டுமொத்த முயற்சியும் பாஜக சார்பிலேயே மேற்கொள்ளப்படுகின்றனவாம். அதிமுக இதில் எதையும் செய்யவில்லை என சொல்லப்படுகிறது.
விஜய் தங்களது அணிக்கு வந்து விட்டால் நிச்சயமாக அது திமுக கூட்டணியை விட மெகா கூட்டணியாகவும் வெற்றி கூட்டணியாகவும் இருக்கும் என்று பாஜக கணக்கு போடுகிறது. அந்த அரசியல் கணக்கு எடுபடும் பட்சத்தில் “அதிமுக – பாஜக கூட்டணியில் தவெகவுக்கு 50 இடங்களும், விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட இருப்பதாகவும்” சொல்லப்படுகிறது. இதை முன்வைத்தே பேச்சுவார்த்தை முடுக்கி விடப்பட்டுள்ளதாம். மேற்கூறிய விடயங்கள் நடக்கும்பட்சத்தில் தனித்து போட்டி பரபரப்பான தேர்தல் அறிக்கை என தேர்தலுக்கு தயாராகி வந்த விஜய் அரசியல் பயணத்தில், மாற்றம் ஏற்பட்டு அது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
