தவெக அமைச்சரவையில் சேர விசிகவுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்ததாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அயோத்தி தாச பண்டிதரின் 181-வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது,  அயோத்திதாசர் பண்டிதரை போற்றுவிக்கும் வகையில் கடந்த திமுக அரசு விசிக வைத்த கோரிக்கையை ஏற்று இந்த மணிமண்டபத்தை அமைத்ததாகத் தெரிவித்தார்.

அம்பேத்கர் மற்றும் பெரியாருக்கும் அரசியல் முன்னோடியாக இருந்தவர் அயோத்திதாச பண்டிதர் எனக் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய வினாவுக்கு விடையளித்த திருமாவளவன்,

தமிழக அமைச்சரவையில் விசிக இடம்பெற வேண்டும் என தவெக அழைப்பு விடுத்ததற்கு நன்றி  தெரிவித்தார். விசிகவின் உயர்நிலை குழு கூட்டம் காணொளியில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றதாகவும் அப்போது, தலைவர் முடிவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தபின்னர்தான் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாகவும் கூறினார்.

முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் பதவியேற்ற பின்னர் வேளச்சேரியில் உள்ள அலுவலகத்துக்கு வந்தபோதே அமைச்சரவையில் சேரும்படி முதல்வர் விஜய் வலியுறுத்தியதாகவும்,

அதனை தற்போது ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக கூறி உள்ளார் எனவும் திருமா தெரிவித்தார்.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியபோதே எங்களை அழைப்பதற்கு உரிய செய்தியாகத்தான் அதனை பார்த்ததாகக் கூறிய திருமாவளவன், தற்போதைய சூழல் கருதி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தான் கொடுத்தோம் எனவும் கூறினார். அமைச்சரவையில் பதவியேற்பது குறித்துமுன்னணி பொறுப்பாளர்களோடு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வேளச்சேரியில் உள்ள அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தவெக அமைச்சரவையில் சேர்வது குறித்து மீண்டும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.தவெகவில் ஒருபிரிவு அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாது என தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version