பண்டிதர் அயோத்திதாசரின் 181-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பல்வேறு பரபரப்பான பதில்களை அளித்தார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து இம்முறை எத்தனை அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளார்கள் என்ற கேள்விக்கு, அது குறித்து கட்சியின் அகில இந்தியத் தலைமையிடமிருந்து கட்டாயம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பதவியைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக கூட்டணியில் வேறு கோரிக்கைகள் கேட்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்துக் கேட்கப்பட்ட போது, இது தொடர்பாக ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து விவரங்களும் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ள கருத்து குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன் கவனத்திற்கு அப்படி எந்தத் தகவலும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்குத் தமிழகம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்து குறித்த காங்கிரஸின் நிலைப்பாட்டை, தான் நிச்சயம் டெல்லியில் உள்ள கட்சியின் தேசியத் தலைமைக்குக் கொண்டு சென்று, அவர்களின் முடிவின்படி செயல்பட உள்ளதாகத் தெரிவித்தார். அதேபோல், அதிமுகவும் திமுகவும் அரசியல் ரீதியாக இணைவது குறித்த பேச்சுக்களை ஊடகங்களில்தான் பார்க்க முடிகிறது என்றும், உண்மையில் அவர்கள் இணைகிறார்களா என்பதில் ‘ஆயிரம் மில்லியன்’ கேள்விகள் நிறைந்துள்ள நிலையில், தற்போதைய சூழலில் அப்படி நடப்பதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்பதே தனது கருத்து என்றும் விவரித்தார்.
பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், தவெக கூட்டணியில் இணையப் போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, இந்த அரசியல் நகர்வுகளைத் தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இது குறித்து கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து கலந்து பேசி அடுத்தகட்ட முடிவை எடுப்போம் என்றும் தெரிவி்த்தார்.
