தன்னைப் புறக்கணிப்பதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனக் கூறிவிட்டு, திமுக உறுப்பினர் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.
திருச்சி மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் துணை மேயர் திவ்யா, ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மேயர் அன்பழகன், பேசுகையில் திருச்சியில் 2026 – 27ல் சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து இதுவரை சுமார் 2லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும்,
திருச்சியில் நான்கு கருத்தரிப்பு மையங்களில் இதுவரை 800-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு இனவிருத்தி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இதுவரை மேற்கொண்ட பட்ட பணிகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் பேசிய போது தனது பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக பணிகள் தாமதமாக நடப்பது மட்டுமல்லாமல் எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் இருப்பது தன்னை புறக்கணிப்பதாக கருதுவதாகக் கூறினார்.
அப்படி புறக்கணிப்பதாக இருந்தால் நான் என் பதவி ராஜினாமா செய்கிறேன் என ஆவேசப்பட்ட அவர், பணிகள் மேற்கொள்ளாததால் வாக்கு சரிவு ஏற்படும் என அப்போதைய அமைச்சரிடம் தெரிவித்தும், அவரும் ஏமாற்றி விட்டார் என கூட்டத்தில் தெரிவிக்கவே மாமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காஜாமலை விஜய் மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவேண்டிய பணிகள் குறித்து கோரிக்கைகளை வைத்தார்.
இதேபோல் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தங்கள் வார்டுகளில் தேவையான அடிப்பட தேவைகள் குறித்தும் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கைகளை கேட்டு அறிந்த மேயர் அன்பழகன் விரைந்து பணிகளை மேற்கொள்வதற்கான அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
