தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? எந்த கட்சி பெரும்பான்மை பிடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் மேலோங்கி காணப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் படி, ஒரு சிலர் திமுக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும், இன்னும் சிலர் 180 இடங்கள் வரை தவெகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவதால், இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று தனது கட்சி வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 234 தொகுதிகளிலும் கூட்டணி அமைக்காமல் தனித்து களம் கண்ட தவெக சார்பில் 233 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். எடப்பாடி தொகுதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்து வேட்பாளர்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்ட ’17C’ ஒரிஜினல் படிவத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

17C என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் அடங்கிய படிவமாகும். இது தேர்தல் அலுவலர் மூலம் வேட்பாளர்களிடம் வழங்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு விஜய் பல்வேறு ஆலோசனைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version