ன்னை தமிழக முதலமைச்சராக முன்மொழிந்து இரு முக்கிய அரசியல் கட்சிகள் அணுகியதாக கூறப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெகவுக்கு 108 இடங்களே கிடைத்ததால், அந்த கட்சி பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்து வந்தது.

இதனிடையே தவெக ஆட்சி அமைக்க வரவிடாமல் தடுப்பதற்காக திமுக – அதிமுக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று ‘டீல்’ பேசப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதே சமயம், திமுக – அதிமுக ஆதரவுடன் திருமாவளவனை முதலமைச்சராக்க ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இன்னொரு தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில்தான், சென்னை வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், சமீபத்திய அரசியல் பரபரப்புகள், புதிய ஆட்சி அமைப்பு மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

விஜய்க்கு பாராட்டு

தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றது அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் என்று திருமாவளவன் பாராட்டினார்.

தேர்தல் காலத்தில் கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து ஆட்சி நடத்த வேண்டும் என்ற விஜயின் அணுகுமுறை மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில், புதிய அமைச்சரவையில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இடதுசாரி கட்சிகளின் கருத்துகளையும், கட்சியின் பொதுச் செயலாளர்களான சிந்தனை செல்வன் மற்றும் ரவிக்குமார் ஆகியோரின் ஆலோசனைகளையும் பரிசீலித்த பின்னரே வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

”நாங்கள் தொடர்ந்து அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அந்த கோரிக்கை இன்னும் அப்படியே உள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதல்வராக்க முயற்சியா? 

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த திருமாவளவன், “அதிமுக, திமுக மற்றும் சில கூட்டணி கட்சிகள் இணைந்து என்னை முதலமைச்சராக முன்வைக்க முயன்றதாக தகவல் வந்ததாகவும், ஆனால் அரசியல் முடிவுகள் உடனடியாக எடுக்கப்படுவதில்லை என்றும், கட்சியின் எதிர்காலம், கூட்டணிக் கணிதம் மற்றும் சமூக நீதி அரசியல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர்  விளக்கினார்.

“வெறும் பதவி அல்லது அதிகாரத்திற்காக நாம் முடிவு எடுக்க முடியாது. விளிம்புநிலை மக்களின் எதிர்பார்ப்புகளையும், எங்கள் அரசியல் திசையையும் கருத்தில் கொண்டு தான் வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம்,” என்று திருமாவளவன் மேலும் தெரிவித்தார்.

தவறான தகவல்

இதனிடையே செய்தியாளர்களின் சந்திப்புக்குப் பின்னர் தனது எக்ஸ் தளத்தில் தனது பேட்டி தொடர்பாக விளக்கம் அளித்துள்ள திருமாவளவன்,”

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, என்னை முதல்வராக்கும் முயற்சி குறித்து சில நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்ததாக மட்டுமே கூறினேன். திமுக அல்லது அதிமுக சார்பில் யாரும் அதிகாரபூர்வமாக என்னை அணுகவில்லை என்றும், நானும் யாரிடமும் பேசியதில்லை என்றும் தெரிவித்திருந்தேன்.

இந்த பதிலை திரித்து, வேறு பொருள் தரும் வகையில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவது வருத்தமளிப்பதாக  கூறியுள்ள திருமாவளவன், தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகும் அரசியல் சூழல் இன்னும் உருவாகவில்லை என்பதும் அனைவரும் அறிந்த உண்மை எனவும், இதுகுறித்த தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version