We The Leader இயக்கத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பை மையமாகக் கொண்டு நடத்தப்படும் முதல் மாநில அளவிலான விழிப்புணர்வு மாநாடு, நாளை மாலை பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். மாநாட்டிற்கான பந்தல் மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் அண்ணாமலை தொடங்கிய We The Leader இயக்கம், குறுகிய காலத்திலேயே தமிழகம் முழுவதும் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆதரவைப் பெற்று வளர்ந்து வருகிறது. இயக்கத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த இயக்கத்தின் முதல் பெரிய மக்கள் நிகழ்வாக ‘போதையில்லா பொள்ளாச்சி’ என்ற பெயரில் நடைபெறும் மாநாட்டிற்காக, பொள்ளாச்சி–கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆச்சிப்பட்டி அருகே 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு நடைபெறும் இடத்திற்கான பூமி பூஜை கடந்த 2ஆம் தேதி நடைபெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டமைப்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கேற்ற வகையில் குடிநீர், கழிப்பறை, மருத்துவ உதவி மையங்கள், அவசர சிகிச்சை வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்வு அரசியல் கூட்டமாக இல்லாமல், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுமக்கள் மாநாடாக நடத்தப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் வசந்த ராஜன் தெரிவித்துள்ளார். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
