தவெக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்த பரபரப்பு குற்றச்சாட்டுகளில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை புறக்கணித்துள்ள நிலையில், அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திருவல்லிக்கேணி போலீசார் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டி, சில எம்.எல்.ஏ.க்களிடம் பணப் பேரம் நடத்த முயற்சி நடைபெற்றதாக அமைச்சர் நிர்மல்குமார் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த பின்னணியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

விசாரணையில், ஐ.பி.டி.எஸ். எனும் தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவன உரிமையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே டாக்டர் இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜி மற்றும் அசோக்குமார் இருவரையும் ஜூலை 6-ம் தேதி (நேற்று) நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினர்.

நேற்று காலை முதலே திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வெளியே பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்து காத்திருந்தனர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக இருவரும் ஆஜராகவில்லை. இதனால், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்துவது, மீண்டும் சம்மன் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை போலீசார் பரிசீலித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேலும் சிக்கலான திசையை நோக்கி நகர்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் த.வெ.க. ஆட்சியின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும், எதிர்க்கட்சிகளுக்கு இடையே புதிய மோதல்களுக்கு வித்திடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version