கடந்த 2021ஆம் ஆண்டு முகில்பேட்டெ என்னும் கன்னட திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை கயாடுலோஹர். தொடர்ந்து மலையாளம்,  மராட்டி படங்களில் நடித்து வந்த கயாடு, 2025ஆம் ஆண்டில் டிராகன் என்னும் தமிழ்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

தற்போது இதயம் முரளி மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜின் படமொன்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் (social media) இருந்து தற்காலிகமாக ஒரு சிறிய இடைவெளி எடுப்பதாக கயாடு லோஹர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ​சில நேரங்களில், நாம் நம் உடலுக்குக் கொடுக்கும் அதே அளவிலான ஓய்வு நம் மனதிற்கும் தேவைப்படுகிறது. வேகத்தைக் குறைக்கவும், சிறிது காலம் இதிலிருந்து விலகியிருக்கவும், திரைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையையும் என்னையும் முழுமையாக உணர அதிக நேரம் செலவிட வேண்டியதன் அவசியத்தையும் நான் உணர்கிறேன் எனக் கூறியுள்ளார்.

​இங்கு எனக்கு ஆதரவளித்த, என்னை ஊக்கப்படுத்திய மற்றும் அன்பைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. உங்களின் செய்திகளும் அன்பும் நீங்கள் நினைப்பதை விட எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை.

​நான் சில காலம் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருப்பேன், ஆனால் முக்கியமான அறிவிப்புகள் ஏதேனும் இருந்தால், அவை இந்த கணக்கில் எனது குழுவினரால் (team) பகிரப்படும் எனவும் கூறியுள்ளார்.

​அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் அன்பு கிடைக்க வாழ்த்துகிறேன்.

​விரைவில் சந்திப்போம் என கயாடுலோஹர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கயாடுலோஹர் தனக்குத் தானே சுய விளம்பரம் செய்து கொள்வதாகக் கூறி இணையத்தில் கடுமையான ட்ரோல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானார்.

பிரதீப் ரங்கநாதனுடன் ‘டிராகன்’ படத்தில் நடித்த சமயத்தில், கயாடு லோஹர் தனது மொபைலில் “தெலுங்கு சினிமாவின் அடுத்த டாப் ஹீரோயின்” எனத் தன்னைப் பற்றித் தானே மீம்ஸ் தயாரித்து வைத்திருந்தது இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து, “தான் சார்ந்த படங்களுக்குப் பப்ளிசிட்டி தேவை என்பதால் தானே மீம்ஸ் செய்து பரப்புகிறார்” என கயாடுலோஹரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.

இதேபோல் கடந்த ஆண்டு, மே மாதம், தமிழ்நாட்டின் TASMAC முறைகேடு வழக்கில் கயாடுவின் பெயரும் அடிபட்டது. “தனியார் பார்ட்டிகளில் கலந்துகொள்ள அவர் ரூ.35 லட்சம் வரை கட்டணம் வசூலித்தார்” என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பின.

இந்த தொடர்ச்சியான இணைய தாக்குதல்கள் மற்றும் வதந்திகள் குறித்து பேட்டி அளித்தவர், “நான் யாருக்கும் கெடுதல் நினைக்கவில்லை, என்னை ஏன் இப்படி டார்கெட் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை” என வேதனை தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், தற்போது சமூக ஊடங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version