தமிழக அரசு இளம்பெண்கள் மற்றும் நலிவடைந்த சமூகப் பிரிவினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக முக்கிய முடிவு எடுத்துள்ளது. முதலமைச்சர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டுறவுத் துறை ஆய்வுக் கூட்டத்தில், ‘சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் புதிய தொழில்முனைவோர் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்கள் மூலம் இளம்பெண்கள் மற்றும் பின்தங்கிய பிரிவினர் தொழில் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும் கடன் வழங்கப்படும். இந்தாண்டில் மட்டும் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.7,000 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் மூலம் இக்கடன்கள் வழங்கப்படும்.

மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ரேஷன் கடைகள் மேம்பாடு மற்றும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டுறவுத் துறை ஏற்கனவே பயிர் கடன், நகைக் கடன், சுய உதவிக் குழுக் கடன், சிறு வணிகக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகைக் கடன்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இப்புதிய திட்டம் அந்தத் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் தொடர் ஆய்வுக் கூட்டங்களில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்படும் இந்தத் திட்டம், மாநிலத்தில் சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தி, நலிவடைந்த பிரிவினருக்கு நேரடி பலன் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version