பெங்களூருவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 3புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு சென்ற அவர், 3 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். ”பெங்களூரு-பெலகாவி, அமிர்தசரஸ்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் – புனே” ஆகிய வழித்தடங்களில் இந்த புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
பெங்களூருவில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதையிலும், சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதையிலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பசுமை நிறப்பாதையில் உள்ள ஆர்.வி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மஞ்சள் நிறப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி பச்சை கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்பின்னர், ரயிலின் உள்ளே சென்று பிரதமர் மோடி பார்வையிட்டவர், ரயிலில் அமர்ந்திருந்த மாணவ மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடினார். இதனை தொடர்ந்து,
ஜே.பி.நகர் 4-வது பிளாக்கில் இருந்து கடபுகெரே வரையிலான 3-வது கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி, பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.