மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு நாளை (மார்ச் 23) முதல் அதிகாரப்பூர்வமாக நீக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 6ம் தேதி இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் ரத்துகள் மற்றும் அதன் விளைவாக டிக்கெட் விலைகள் விண்ணைத் தொட்டதைத் தொடர்ந்து, பயணிகளைக் காக்க தற்காலிகமாக இந்த விலைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்துவிட்டதாகக் கூறி, இந்த உச்ச வரம்பை அரசு விலக்கிக்கொண்டுள்ளது.

இந்த அதிரடி மாற்றத்திற்கு மிக முக்கியக் காரணமாக, சர்வதேச அளவில் நிலவும் ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் பார்க்கப்படுகிறது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விமான எரிபொருள் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே பல முன்னணி விமான நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை  அமல்படுத்தியுள்ள நிலையில், தற்போது அரசின் கட்டுப்பாடும் நீங்கியுள்ளதால், முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயணக் கட்டணம் பல மடங்கு உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அரசின் இந்த முடிவால் கோடை விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள நடுத்தர வர்க்க பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் எனத் தெரிகிறது. இருப்பினும், விமான நிறுவனங்கள் தன்னிச்சையாக விலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தினால், மீண்டும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. “சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும்” என்று நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version