மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, துபாயிலிருந்து இயக்கப்படும் அனைத்து சர்வதேச விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கான பயணிகள் துபாய் விமான நிலையங்களிலும், தங்குமிடங்களிலும் தவித்து வருகின்றனர். போர் சூழல் எப்போது தணியும், மீண்டும் எப்போது விமானங்கள் இயக்கப்படும் என்பது குறித்த தெளிவான தகவல் இல்லாததால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலரும் கடும் அச்சத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், ‘ஏழைகளின் பங்காளன்’ என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் சோனு சூட் மீண்டும் தனது மனிதாபிமான முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். துபாயில் சிக்கித் தவிக்கும் பயணிகள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவிப்பதைக் கண்டு மனமுடைந்த அவர், அவர்களுக்குத் தேவையான தங்கும் வசதி மற்றும் உணவுப் பாதுகாப்பை வழங்க முன்வந்துள்ளார். “யாரும் அச்சப்பட வேண்டாம், நாங்கள் இருக்கிறோம்” என்ற நம்பிக்கையை அவர் தனது சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாகப் பகிர்ந்துள்ளார்.
https://x.com/SonuSood/status/2029366631663845854?
பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பும் வரை பாதுகாப்பான தங்குமிடத்தை இலவசமாக வழங்கத் தான் தயாராக இருப்பதாக சோனு சூட் அறிவித்துள்ளார். தவிப்பவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். கொரோனா பேரிடர் காலத்திலிருந்தே தொடர்ந்து இது போன்ற இக்கட்டான சூழல்களில் களமிறங்கி உதவும் சோனு சூட்டின் இந்தச் செயல், ஜாதி, மதம், இனம் கடந்து உலகெங்கிலும் உள்ள மக்களிடையே பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
