குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று பிற்பகல் 1.17 மணிக்கு புறப்பட்டது. சில நிமிடங்களிலேயே அகமதாபாத்தின் குடியிருப்பு பகுதிகளில் விமானம் தாழப்பறந்து கீழே விழுந்து பலத்த சத்தத்துடன் தீப்பிழம்புடன் வெடித்து சிதறியது.
அகமதாபாத் லண்டன் காட்விக் வழித்தடத்தில் ஏர் இந்தியாவின் AI 171 விமானம் விபத்துக்குள்ளானதாக ஏர்இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து மதியம் 13.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என்றும் தெரிகிறது.
விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார். துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கி அனுபவம் வாய்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை, பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
90 பணியாளர்களைக் கொண்ட மூன்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் காந்திநகரில் இருந்து விமான விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளன. மொத்தம் மூன்று குழுக்கள் வதோதராவில் இருந்து அகமதாபாத்திற்கு அனுப்பி வைக்கப்பப்பட்டுள்ளன.
விபத்தில் சிக்கிய பயணிகளின் நிலை என்ன என்பது தான் இப்போது மாபெரும் கவலையாக உள்ளது.
