தெற்கு அந்தமான மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 20ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவது வழக்கம். இதன்தொடர்ச்சியாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவ மழை வழக்கத்தைவிட முன்கூட்டியே தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ மழை இன்று (மே 13) தொடங்கி உள்ளதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.
இதனால், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் நாளை (மே 14) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
Related Posts
Add A Comment