புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி நாளை (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி, மற்றும் பான் மசாலா மீதான சுகாதார செஸ், அதிகபட்சமாக 40% ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது. புதிய முறை நடைமுறைக்கு வருவது மூலம் சிகரெட் நீளத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்படும் புதிய முறை அமலுக்கு வருகிறது. சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ரூ.2.05-8.50 வரை விலை உயர்கிறது.
கூடுதல் கலால் வரிகளால், அடுத்த நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6-8% அளவு குறையக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மெல்லும் புகையிலை மற்றும் ஜர்தா வாசனை கொண்ட புகையிலை மற்றும் குட்காவிற்கு முறையே 82% மற்றும் 91% கலால் வரி விதிக்கப்படுகிறது.
ஒரு சிகரெட்டுக்கு எவ்வளவு உயரும்: குறுகிய, பில்டர் இல்லாத சிகரெட் (65 மிமீ நீளம் வரை) வரி மூலம் ரூ.2.05 விலை உயரும். குறுகிய பில்டர் உள்ள குறுகிய சிகரெட் ரூ.2.10 வரை விலை உயரும். நடுத்தர நீளம் (65-70 மிமீ) ரூ.3.6 முதல் ரூ.4 வரை விலை உயரும்.
நீண்ட, பிரீமியம் சிகரெட் (70-75 மிமீ) ரூ.5.4 வரை விலை உயரும்.
வழக்கத்திற்கு மாறான வடிவமைப்பு கொண்ட சிகரெட்டுகளுக்கு மட்டுமே ஒரு குச்சிக்கு ரூ.8.50 வரி விதிக்கப்படும். இதன் மூலம் நாளை முதல் சிகரெட்-க்கு 2 ரூபாய் முதல் 8.50 ரூபாய் வரையில் உயர உள்ளது.
இதனால் கோல்ட் ஃப்ளேக் பிரீமியம், ரெட் அண்ட் வைட் கிங் சைஸ், கிளாசிக், மார்ல்போரோ, நேவி கட், ஐஸ் பர்ஸ்ட் போன்ற நீண்ட சிகரெட்டுகள் அதிகப்படியான விலை உயர்வை எதிர்கொள்ளும். இந்த வரி உயர்வு மக்களின் புகைப்பழக்கத்தை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்தியா தனது புகையிலை வரி விதிப்பை மேம்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
