மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது தொடர்பாகப் பகுதிவாரி வாக்கெடுப்பு (Division Vote) நடத்தப்பட்டது. இந்த மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது குறித்த வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக 207 உறுப்பினர்களும், எதிராக 126 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த மசோதா லோக்சபாவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னதாக, நாட்டின் தொகுதி எல்லைகளை மாற்றியமைப்பது தொடர்பான இந்த மசோதாவால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபட்டன.

இருப்பினும், இந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக நிறைவேற்றுவதில் அரசுக்குச் சவால்கள் காத்திருக்கின்றன. மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில், இத்தகைய முக்கிய சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். அதாவது, மசோதா சட்டமாக மாற 361 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தற்போதைய பகுதிவாரி வாக்கெடுப்பில் 207 பேரின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அடுத்தகட்ட விவாதங்களின்போது மற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் ஆளும் தரப்பு உள்ளது.

மறுபுறம், மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் அனல் பறந்து வருகின்றன. இந்த விவகாரங்கள் தொடர்பாக அவையில் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் விளைவாக, மாநிலங்களவை (ராஜ்யசபா) நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு குறித்த அடுத்தகட்ட நகர்வுகள் இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் நாடு முழுவதும் இந்த விவாதம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களுக்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மசோதாக்களை அறிமுக செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலில் மின்னணு முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டது. பின் வாக்குச்சீட்டு முறையில் பகுதிவாரியாக எம்.பி.க்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 251 பேர் ஆதரவாகவும், 185 பேர் எதிராகவும் வாக்களித்ததாக சபாநாயகர் ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version