மத்தியப் பாடநூல் கழகமான NCERT, 8-ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் இந்திய நீதித்துறை குறித்துத் தவறான மற்றும் அவதூறான தகவல்களை வெளியிட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று NCERT நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில், “8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்துத் தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு மிகப்பெரிய தவறு. ஆய்வு மற்றும் அச்சிடும் பணியின் போது ஏற்பட்ட இந்த கவனக்குறைவிற்காக நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்திய நீதித்துறையையும், அதன் உன்னத மாண்பையும் நாங்கள் எப்போதும் உயர்வாக மதிக்கிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைப் பாடம் நீக்கம்: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட பாடம், புத்தகத்தில் இருந்து உடனடியாக முழுமையாக நீக்கப்படும் NCERT உறுதி அளித்துள்ளது. மேலும், மாணவர்களுக்குத் தவறான வரலாற்றுத் தரவுகளோ அல்லது சட்டச் சிக்கல்களோ சென்று சேரக் கூடாது என்பதில் தாங்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பதாகவும் கல்வி அமைச்சகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்போது நீக்கப்பட்டுள்ள பாடத்திற்குப் பதிலாக, நீதித்துறையின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த சரியான தரவுகளுடன் கூடிய புதிய பாடம் தயார் செய்யப்பட உள்ளது. இந்தப் புதிய பாடம் வரும் 2026-27 கல்வி ஆண்டிற்குள் அனைத்துப் பாடப்புத்தகங்களிலும் சேர்க்கப்படும் என்றும், அதுவரை மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் NCERT தெரிவித்துள்ளது.
