தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்று வந்த சட்டப்பேரவைத் தேர்தல் இன்றுடன் (ஏப்ரல் 29) நிறைவடைவதைத் தொடர்ந்து, இன்று மாலை வெளியாகவுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, இன்று மாலை 6:30 மணிக்கு மேல் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடையும் வரை கருத்துக்கணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126A-ன் கீழ் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டது. இன்று மாலை இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்து 30 நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது மாலை 6:30 மணிக்கு மேல் இந்தத் தடை நீக்கப்படுவதால், ஊடகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் தங்களது கணிப்புகளை வெளியிடத் தொடங்கும்.

இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா, சி-வோட்டர், டுடேஸ் சாணக்யா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது விரிவான கருத்துக்கணிப்பு முடிவுகளை இன்று இரவு வெளியிட உள்ளன. இந்தக் கணிப்புகள் மக்களின் மனநிலை மற்றும் எந்தக் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த ஒரு முன்னோட்டத்தை வழங்கும். இருப்பினும், இது இறுதியான முடிவல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்தநிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை (Exit Polls) மாலை 6:30 மணி வரை வெளியிடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மிகக் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. இருப்பினும், பல்வேறு சமூக வலைதளப் பக்கங்களில் தங்களுக்குத் தோன்றும் சில தரவுகளைக் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல் என்றும், இத்தகைய செயல்கள் வாக்காளர்களின் முடிவில் தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version