புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் பாதுகாப்பில் குளறுபடி காரணமாக, பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கக் கட்டிகள் திருடு போனதாக டிஜிபி அறிக்கையில் வெளியாகி உள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக கேரள மாநில டிஜிபி ராவதா ஏ. சந்திரசேகர் சமர்ப்பித்த அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் காணாமல் போன சம்பவம் கோவில் நிர்வாகத்தின் மீது கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 78 கிராம் தங்கப் பொருட்கள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், பராமரிப்புப் பணிக்காக அகற்றப்பட்ட பல அடுக்கு தங்க விளக்குகள் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களோ, பதிவுகளோ இன்றி மாற்றப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழையும் கோவில் ஊழியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அரச குடும்பத்தினரின் நெருங்கிய கூட்டாளிகள் உள்ளிட்டோர் உரிய சோதனை இன்றி அனுமதிக்கப்படுவது பாதுகாப்புக் குறைபாட்டுக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிபி அறிக்கையில், கோவிலின் மதிப்புமிக்க தங்கம், வெள்ளி பொருட்களை உடனடியாக பாதுகாப்பான அறைக்கு மாற்ற வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமராக்கள், சோதனை நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானதும் கேரள அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கத் திருட்டு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பத்மநாபசுவாமி கோவிலிலும் இத்தகைய புகார் எழுந்திருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், கோவில் நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்துள்ளது. “வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கோவிலின் நற்பெயரை கெடுக்கும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அனைத்து விலைமதிப்பான பொருட்களும் மிகுந்த பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன” என்று நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்மநாபசுவாமி கோவில் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இங்கு 2011ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதையல் அறைகளில் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள தங்கம், வைரங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோவிலில் ஏற்பட்டுள்ள இந்த பாதுகாப்புக் குறைபாடு பக்தர்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் உள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், “கோவில் நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் இந்த விவகாரம் முழுமையாக விசாரிக்கப்பட்டு உண்மை வெளியாக வேண்டும். கோவில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் தேவையான சீர்திருத்தங்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
