நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2ம் தேதியில் இருந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் ராகுல் காந்தி பேசும்போது, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களை சுட்டிக்காட்ட விரும்பினார். இதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தில் வார்த்தைப் போர் நீடித்து வருகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஏழாவது நாளான இன்று. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையில், மக்களவையில், எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரையைத் தடுத்ததாகக் கூறப்பட்டதாகவும் கூறி ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டன . கூச்சல் குழப்பம் காரணமாக, மக்களவை நடவடிக்கைகள் தொடங்கிய உடனேயே ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவையில் தொடர்ந்து எழுந்த அமளி குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி தெரிவித்தார் . அவையின் கண்ணியத்தைப் பேணுவது அனைத்து உறுப்பினர்களின் பொறுப்பு என்றும், தற்போதைய சூழ்நிலையில் அவை செயல்படுவது சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, மக்களவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் 12 மணிக்கு தொடங்கிய நிலையிலும், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு நடத்தி அவைத் தலைவர் ஓம் பிர்லா நிறைவேற்றியுள்ளார். தொடர்ந்து இன்று பகல் 2 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மாலை 5 மணிக்கு மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தின் போது பிரதமர் மோடி தனது பதிலை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, மக்களவையில் 22 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமர் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் அப்போதை பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜக நன்று உரை தெரிவிக்கவிடமல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
