பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக சித்தரிக்கும் வகையிலும், மார்பிங் செய்யப்பட்ட படங்கள் மற்றும் தவறான ரீல்ஸ் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது தொடர்பாக, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ இந்தியாவின் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட கணக்குகளை இயக்கியவர்கள் மீது ஐதராபாத் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், நம்பல்லியைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரிவு உறுப்பினர் டி. சாம்கிரண் கவுட் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 29 அன்று சமூக வலைதளங்களை உலாவிக்கொண்டிருந்தபோது, பிரதமர் மோடிக்கு எதிரான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவதூறு கருத்துக்கள் அடங்கிய பல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் பேஸ்புக் பதிவுகளை தான் கண்டதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையான அவதூறு உள்ளடக்கங்கள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வன்முறையைத் தூண்டுவோர் மற்றும் பாரதிய நியாய சகிதா (BNS), தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கோரப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய தவறான பதிவுகள் தனது தளங்களில் தொடர்ந்து இருக்க அனுமதித்ததற்காக மெட்டா நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சட்டம் பிரிவு 66(C) மற்றும் 67, மற்றும் பாரதிய நியாய சகிதா (BNS) பிரிவுகள் 353(2), 336(4)-ன் கீழ் சைபர் கிரைம் காவல் துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, நீட் விவகாரம் தொடர்பான பிரதமர் மோடியின் காணொளியை பேஸ்புக் நிறுவனம் தற்காலிகமாக முடக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அந்த வீடியோ தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் மீட்டெடுக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
