மே 1. உலகம் முழுவதும் சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளையும், அவர்களின் தியாகங்களையும் போற்றும் வகையில் இந்த நாள் அமைகிறது.

18-ம் நூற்றாண்டின் இறுதியில், தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” என்ற கோரிக்கையை முன்வைத்து 1886-ம் ஆண்டு மே 1-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் மிகப்பெரிய வேலைநிறுத்தம் நடைபெற்றது.

மே 4-ம் தேதி ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடந்த கூட்டத்தில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. அதனைத்தொடர்ந்து காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தொழிலாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். தொழிலாளர்களின் இந்தத் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 1889-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில், மே 1-ம் தேதியை சர்வதேச தொழிலாளர் தினமாக அறிவித்தனர்.

இந்தியாவில் முதன்முதலில் மே தினம் சென்னையில் தான் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1923-ம் ஆண்டு மே 1-ல், சென்னை மெரினா கடற்கரையில் பொதுவுடைமைச் சிந்தனையாளர் சிங்காரவேலர் தலைமையில் இந்தியாவின் முதல் மே தின விழா நடைபெற்றது. இந்தியாவிலேயே முதல்முறையாகத் தொழிலாளர் கொடியான சிவப்புக்கொடி ஏற்றப்பட்டதும் இந்த நிகழ்வின் போதுதான். தமிழகத்தில் மே தினத்திற்கு அரசு விடுமுறையாக 1967ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

தற்காலச் சூழலில் தொழிலாளர் தினம் என்பது வெறும் விடுமுறை நாளாக இல்லாமல், மாறிவரும் வேலைச் சூழலுக்கு ஏற்ப விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இருக்கிறது. 2026-ம் ஆண்டிற்கான முக்கிய நோக்கமாக “வேலைச் சூழலில் தொழிலாளர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்” முன்னிறுத்தப்படுகிறது. கணினி மற்றும் ஆன்லைன் வேலைகள் அதிகரித்துள்ள நிலையில், வேலை நேரத்திற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவது (Work-Life Balance) இன்றைய மே தினத்தின் முக்கியப் பேச்சாக உள்ளது.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான வேலைக்குச் சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வும் இன்று வலியுறுத்தப்படுகிறது. “உழைப்பவரே உயர்ந்தவர்”  என்ற சொல்லுக்கு ஏற்ப, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாக இருப்பது தொழிலாளர் வர்க்கமே.

சாலைகள், கட்டிடங்கள், மென்பொருள்கள் என நாம் இன்று அனுபவிக்கும் அத்தனை வசதிகளுக்குப் பின்னாலும் யாரோ ஒரு தொழிலாளியின் வியர்வை ஒளிந்திருக்கிறது. அவர்களின் உழைப்பை மதிக்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நாம் உறுதிபூண வேண்டிய நாளே இந்த மே தினம்.

மே தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; அது உழைப்பவனின் உரிமை முழக்கம். எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு நமக்குக் கிடைத்துள்ள 8 மணி நேர வேலை என்ற உரிமையைப் போற்றுவோம்; உழைப்பைப் பாராட்டுவோம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version