2022 முதல் தலைமறைவாக இருந்த பிரபல கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய், அமெரிக்காவிலிருந்து இன்று நாடுகடத்தப்பட்ட நிலையில் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார்.
அன்மோல் பிஷ்னோய் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர். லாரன்ஸ் மீது மகாராஷ்டிரா அமைச்சர் பாபா சித்திக்கியை கொலை செய்த வழக்கு, நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கு, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருடைய சகோதரரான அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா, கனடாவுக்கு மாறி மாறி பயணம் செய்தது தெரியவருகிறது.
இவர் கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்கள் இன்று நாடு கடத்தப்பட்டனர். அன்மோல் இன்று புதுடெல்லி கொண்டுவரப்பட்ட நிலையில், அவரை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) கைது செய்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் கைது செய்யப்பட்ட 19வது நபர் அன்மோல் ஆவார்.
