புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இக்கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி 4 இடங்களிலும், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாய கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் மொத்தம் 18 இடங்களுடன் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ள இக்கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கத் தயாராகிவிட்டது. மறுபுறம், திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி வெறும் 6 இடங்களை மட்டுமே பெற்றுப் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம்,  ரங்கசாமி புதுச்சேரியின் முதலமைச்சராக 5-வது முறையாக அரியணை ஏறுகிறார். தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் களம் கண்ட அவர், இரண்டிலும் வெற்றி வாகை சூடித் தனது செல்வாக்கை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். மங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளரை விட சுமார் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் அபார வெற்றி பெற்றுள்ளார். தனது வழக்கமான ஆன்மீக நம்பிக்கையின்படி, வெற்றிச் செய்தியைத் தொடர்ந்து தனது குருவான அப்பா பைத்தியசாமி கோவிலுக்குச் சென்று அவர் வழிபாடு நடத்தினார்.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தனது முத்திரையைப் பதித்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், இத்தேர்தலில் 2 இடங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான நேயம் மக்கள் கழகம் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில், அடுத்த சில நாட்களில் நல்ல நேரம் பார்த்து ரங்கசாமி அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். முந்தைய ஆட்சியில் இருந்த அமைச்சரவைக் கூட்டணியே இம்முறையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், புதுச்சேரி அரசியலில் ஒரு ஸ்திரமான சூழல் நிலவுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version