குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக மக்களவையில் பிரதமர் மோடியின் உரை ஒத்திவைக்கப்பட்டதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமளித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையை பிரதமர் மோடி நேற்று (பிப்ரவரி 4) வழங்க இருந்தார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று அவை தொடங்கியதும் மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுத்ததை கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், பிரதமர் மோடி இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்பது குறித்து சபாநாயகர் ஓம். பிர்லா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்துகொண்டதாகவும், அதனால்தான் அவரை மக்களவைக்கு வர வேண்டாம் என்று தான் அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
“நேற்று அவையில் என்ன நடந்தது என்பதையிம், எம்.பி.க்கள் அவையில் பிரதமரின் இருக்கையை நோக்கி எப்படிச் செல்ல முயன்றார்கள் என்பதை அனைவரும் பார்த்தனர். அப்போது, பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர் என்பதால் தான் அவரை வரவேண்டாம் என்று நான் தான் கூறியதாக தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 5, 2026) மக்களவை ஒத்திவைக்கப்படும் முன், மக்களவை சபாநாயகர் கூறியதாவது, “அவையில் நடந்தது ஒரு கரும்புள்ளியாகும். காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரை அணுகி எதிர்பாராத சம்பவம் ஒன்றை ஏற்படுத்தக் கூடும் என்ற நம்பகமான தகவல் எனக்கு கிடைத்தது. அந்தச் சம்பவம் நடந்திருந்தால், அது மிகவும் கண்டிக்கத்தக்கதாக இருந்திருக்கும். அதனால் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று நான் அவரை கேட்டுக் கொண்டேன்; அவர் அதனை ஏற்றுக் கொண்டார்,” என்று சபாநாயகர் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா ஆகியோர் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சம்பவத்தை பிரதமருக்கு எதிராக திட்டமிட்டு இருந்ததாகவும் ஓம்பிர்லா குற்றம்சாட்டியிருக்கிறார்.
