பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 29) காலை புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் பங்கேற்றார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, வாரணாசி – புனே மற்றும் அயோத்தி – மும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காசி மற்றும் அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் ரூ.6,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் காசியில் தொடங்கி வைத்தார்.
பிரதமரின் இந்த ஆன்மீகப் பயணம் மற்றும் ரயில் சேவைத் தொடக்கம் அரசியல் ரீதியாகவும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், மோடி காசியில் பூஜை நடத்துவது ஒரு வகை மறைமுகப் பிரச்சாரம் என திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகின்றன. தேர்தலை மையப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்கவே இத்தகைய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இது வழக்கமான வளர்ச்சிப் பணிகள் மட்டுமே என பாஜக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
