அனைத்து செல்போன்களிலும் சன்சார் சாதி (Sanchar Saathi) செயலியை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் செல்போன் இறக்குமதி நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவு அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், செல்போன்களில் அந்த செயலி இருப்பது பயனர்களுக்கு தெரியும் வகையில், முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
மத்திய தொலைத் தொடர்புத் துறையின் Sanchar Saathi இணையதளம், கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. அந்த இணையதளத்தில், காணாமல் போன அல்லது திருட்டுப் போன செல்போன்கள் குறித்து, தகவல் பதிவிட்டு, அதனை பயன்படுத்த முடியாமல் முடக்க முடியும். அதேபோல், அந்த இணையதளம் மூலம் நமது ஆவணங்களை பயன்படுத்தி, நமது பெயர்களில் எத்தனை செல்போன் சிம் இணைப்புகள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன என்பதை கண்டுபிடித்து, அதை தொடர்ந்து பயன்படுத்தவோ அல்லது முடக்கவோ கோரிக்கை வைக்க முடியும்.
Sanchar Saathi செயலி இதுவரை சுமார் 2 கோடி செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
