இந்தியாவில் Vehicle-to-Vehicle (V2V) எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை வாகனத்தில் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Vehicle-to-Vehicle எனப்படும் V2V தொழில்நுட்பம் என்பதை வாகனங்கள் மிக நெருக்கமாக வரும்போது உடனே எச்சரிக்கை விடுக்கும். இந்த தொழில்நுட்பம் சாலையில் வாகனம் ஓட்டும்போது, வாகன ஓட்டிகள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு எச்சரிக்கைகளை அனுப்ப வழிவகை செய்யும். இதனால் வாகனங்கள் ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொள்ளாமல் விபத்துகளைத் தடுக்க முடியும். இந்த தொழில்நுட்பம் முறையாக செயல்படுத்தப்பட்ட பின்னர், விமானத்தை இயக்கும் விமானிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு இடையே வான்வழியாக நடைபெறும் தகவல் தொடர்பை போன்று, சாலையிலும் வாகனங்கள் ஒன்றையொன்று தொடர்பு கொள்ள முடியும் என்று நிதின் கட்கரி இந்த தொழில்நுட்பம் குறித்து விளக்கி பேசினார்.
ஒவ்வொரு வாகனத்திலும் On-Board Unit (OBU) என்ற அமைப்பு பொருத்தப்படும். இதை பொருத்த ரூ.5 ஆயிரம் – ரூ.7 ஆயிரம் வரை செலவாகும் என கூறப்படுகிறது. இது வயர்லெஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாக பயன்படுத்தி, அருகில் உள்ள மற்ற வாகனங்களுக்கு அதன் இருப்பிடம், வேகம், செல்லும் திசை மற்றும் பிரேக்கிங் நிலை போன்ற தகவல்களை பரிமாற்றும். இதனால், வாகன ஓட்டுநர்களுக்கு ஆபத்து வருவதற்கு முன்பே எச்சரிக்கை அடைய வழிவகை செய்யும் என கூறப்படுகிறது.
