ஜெனரல் நரவானே இந்திய ராணுவத்தின் 28-வது தலைமைத் தளபதியாக (Chief of the Army Staff) நியமிக்கப்பட்டார். 2019 டிசம்பர் 31-ஆம் தேதி, ஜெனரல் பிபின் ராவத்திடமிருந்து அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர், 2021 டிசம்பர் 15 முதல் 2022 ஏப்ரல் 30 வரை, தலைமை தளபதிகள் குழுவின் (Chiefs of Staff Committee) இடைக்கால தலைவராகவும் அவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெனரல் நரவனே யார்? ஜெனரல் நரவனேவின் முழுப் பெயர் மனோஜ் முகுந்த் நரவனே. இவர் ஏப்ரல் 22, 1960 அன்று புனேவில் பிறந்தார். இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஒரு அதிகாரியாக இருந்தார். இவர் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியிலும் (NDA) மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியிலும் கல்வி பயின்றார். இவர் பாதுகாப்பு ஆய்வுகளில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். நரவனே ஜூன் 1980-ல் சீக்கிய இலகு காலாட்படையின் 7வது பட்டாலியனில் முதன்முதலில் நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு, அவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள ராஷ்ட்ரிய ரைபிள்ஸின் 2வது பட்டாலியன் (சீக்லி) மற்றும் 106வது காலாட்படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். நரவனே அசாம் ரைபிள்ஸுக்கும் தலைமை தாங்கியுள்ளார், மேலும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார். டிசம்பர் 16, 2019 அன்று, ஜெனரல் பிபின் ராவத்தின் வாரிசாக இவர் அறிவிக்கப்பட்டார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின்படி, ஜெனரல் எம்.எம். நரவணேவின் நினைவுக் குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் 2014-ல் வெளியிடப்படவிருந்தன. 2023-ல், அது பல செய்தி நிறுவனங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது. “ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி” என்ற தலைப்பிலான அந்தப் புத்தகத்திற்குப் பல மின்வணிக இணையதளங்கள் முன்பதிவுகளை ஏற்றுக்கொண்டன. அந்தப் புத்தகம் பெங்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்படவிருந்தது, ஆனால் அதற்கு அரசாங்க அனுமதி மறுக்கப்பட்டது. அரசாங்க அனுமதி தொடர்பான சிக்கல்களால் அந்தப் புத்தகம் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அது அவரது வெளியிடப்படாத நினைவுக் குறிப்பு ஆகும்.
ராகுல் காந்தி மேற்கோள் காட்டிய ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதியதாக கூறப்படும், வெளியிடப்படாத புத்தகம் கடந்த 2020 ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்தியா – சீனா இடையே படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து குறிப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது” என்றார். அதே போல உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கீரன் ரிஜிஜு ஆகியோரும் ராகுல் காந்தியின் பேச்சினை கடுமையாக எதிர்த்தனர்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளதாகக் குற்றம்சாட்டினார். மேலும்,”ஆதாரப்பூர்வமற்ற தகவலை எதையும் நான் கூறவில்லை, மாறாக ராணுவ தளபதி நரவனே எழுதிய விஷயங்களை தான் நான் பேசுகிறேன்” என்றார்.
சபாநாயகர் ஓம் பிர்லா , 349வது விதியின் கீழ் புத்தகம் மற்றும் செய்தித்தாள்களை மக்களவையில் வாசிக்க முடியாது. அவைக்கு சம்பந்தமில்லாத விஷயம் குறித்தும் அவைக்குள் படிக்க முடியாது” என்றும் “விதிமுறைகளுக்கு உட்பட்டு ராகுல் காந்தி பேசவில்லை என்றால் அடுத்த உறுப்பினரை பேச அழைக்க நேரிடும்” எனவும் எச்சரித்தார்.
ராகுல் காந்திக்கு அகிலேஷ் யாதவ், கனிமொழி உள்ளிட்டோர் ஆதரவு வழங்கினர். இதனை தொடர்ந்து ஓம் பிர்லா, அடுத்ததாக அகிலேஷ் யாதவை பேச அழைத்தார். ஆனால் அகிலேஷ் யாதவ் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்தார். சபாநாயகரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
