ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஐரோப்பா முழுவதும் சாக்லேட்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான கிட்காட் (KitKat) சாக்லேட் பார்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது. சுமார் 12 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள சாக்லேட்கள் இதில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சாதாரணமாகப் பணம் அல்லது விலையுயர்ந்த பொருட்களைக் குறிவைக்கும் கொள்ளையர்கள், இவ்வளவு பெரிய அளவில் சாக்லேட்களைத் திருடியிருப்பது அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நிறுவனத்தின் கூற்றுப்படி, அந்த லாரியில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கிட்கேட் பார்கள் மத்திய இத்தாலியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டன. அது போலந்துக்குச் சென்று கொண்டிருந்தபோது மார்ச் 26 அன்று திருடப்பட்டது. அந்த வாகனமும், அதனுடன் இருந்த முழு சரக்கும் இன்னும் காணவில்லை. இந்த சாக்லேட்டுகள், ஃபார்முலா ஒன் பந்தயத்தால் ஈர்க்கப்பட்டு, பந்தயக் கார்களின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட, அதே சமயம் பாரம்பரிய வேஃபர் பாணியைத் தக்கவைத்துக் கொண்ட, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வகை சாக்லேட்டுகளின் பகுதியாகும்.
கிட்காட் சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான சுவிட்சர்லாந்தின் ‘நெஸ்லே’ (Nestlé), இந்த 12 டன் சாக்லேட் திருட்டை உறுதி செய்துள்ளது. தற்போது இந்த வினோதக் கொள்ளை குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நிறுவனம் ஒரு நகைச்சுவையான கருத்தையும் பகிர்ந்துள்ளது. கிட்காட் விளம்பரங்களில் வரும் புகழ்பெற்ற வாசகமான “Take a break” (ஒரு இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்) என்பதை இந்தத் திருடர்கள் கொஞ்சம் அதிகமாகவே சீரியஸாக எடுத்துக்கொண்டு, சாக்லேட்களோடு ‘பிரேக்’ எடுக்கச் சென்றுவிட்டார்கள் போல என்று அந்த நிறுவனம் கிண்டலாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவத்தை அதிகாரிகள் நகைச்சுவையாக மட்டும் பார்க்கவில்லை. ஐரோப்பா முழுவதும் இது போன்ற சரக்கு லாரிகளைக் கடத்தும் சம்பவங்கள் (Cargo Theft) சமீபகாலமாக அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது ஏதோ தற்செயலாக நடந்த திருட்டு அல்ல என்றும், மிகவும் திட்டமிடப்பட்ட ஒரு கும்பலால் (Organised Crime) அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகை காலத்தில் சாக்லேட்களுக்கான தேவை அதிகம் என்பதால், திருடப்பட்ட இந்த 12 டன் சாக்லேட்கள் கறுப்புச் சந்தையில் விற்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், கடைகளில் தொடர்ந்து போதுமான இருப்பு இருக்கும் என்றும் அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. மேலும், நுகர்வோரின் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லை என்பதையும் அது உறுதிப்படுத்தியது.
